வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்..
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள். இதில் பீகார், அசாம், மேற்குவங்காளத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர். முதலில் கட்டிட பணிக்கு வந்தவர்கள் இன்று ஓட்டல்கள், மளிகை கடை வரை பணியாற்ற தொடங்கி இருக்கிறார்கள். மேலும் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் அரசு மற்றும் தனியார் கட்டிட பணிகள், சாலை பணிகளையும் வடமாநிலத்தவரே ஆக்கிரமித்து உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக சமீபகாலமாக வதந்தி பரவி வருகிறது. இதுதொடர்பான போலி வீடியோக்களும் பரவியது. இவ்விவகாரம் பீகார் சட்டசபை வரை தற்போது சென்று விட்டது. நேற்று அம்மாநில சட்டசபையில் இவ்விவகாரம் எதிரொலித்தது.
இந்நிலையில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.. சமூக ஊடகங்கள் வதந்தி பரப்பி சில கீழ்த்தரமாக அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்..
மனித குலத்திற்கு மகத்தான உதவி செய்யும் கருணை தொட்டிலாகவே தமிழ்நாடு இருந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து தொழிலாளர்களும் எங்கள் தொழிலாளர்கள் என்பதை உறுதியாக சொல்லி இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.. எனவே பீகார் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் நேராது என்பதை உறுதியாக தெரிவித்துகொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்..
பீகாரை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தவறான தகவலை பரப்பியதே இந்த பிரச்சனையின் தொடக்கம் என்றும், இதுதொடர்பாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருடன் தொலைபேசியில் பேசி உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. ஊடகங்கள், சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் சமூக பொறுப்பை உணர்ந்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்..