இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மேலும் 6,050 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது..
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 4,000, 5,000 என்று இருந்த நிலையில் இன்று 6,000-ஆக உயர்ந்துள்ளது.. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 6050 பேருக்கு பாதிப்பு உறுதியானது.. கொரோனா காரணமாக நேற்று 1 பேர் இறந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 5,30,943 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,303ஆக அதிகரித்துள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் 2,334 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16, அன்று நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா போன்ற மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.. வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுவத்து குறித்தும், நோய் தொற்றை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.. மேலும் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் மத்திய அரசு அறிவுரைகளை வழங்கும் என்று கூறப்படுகிறது.