ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், அக்டோபர் 7-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு வங்கிகள் ரூ.2,000 நோட்டுகளைப் பெறாது என்றும், ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் மூலம் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த கரன்சி நோட்டுகளை வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கிக் கிளைக்கு சென்று நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். அக்டோபர் 7-ம் தேதி வரை எந்த வங்கிக் கிளையிலும் தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது வேறு வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில் இருக்க வேண்டும். அதாவது, கட்டுப்பாடுகள் இல்லாமல் தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டபூர்வ விதிகளுக்கு உட்பட்டு இந்த டெபாசிட் செயல்முறை இருக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் 2000 ரூபாய் நோட்டுகளை 20,000 ரூபாய் வரை மாற்றுவதற்கான வசதி ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் உள்ள பணம் வழங்கல் கவுன்ட்டர்களில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.