தமிழ்நாடு – தமிழகம் சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்..
கடந்த சில நாட்களாகவே ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.. குறிப்பாக தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைக்ககூடாது, தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் பேசியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. பல்வேறு அரசியல் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், சமூக வலைதளங்களிலும் ஆளுநருக்கு எதிரான ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகியது.. மேலும் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.. தனது உரையில் திராவிட மாடல், சமூக நீதி உள்ளிட்ட வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என். ரவி தவிர்த்தது, உடனடியாக ஆளுநர் உரைக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தது என பல சம்பவங்கள் அரங்கேறின..
இந்நிலையில் தமிழ்நாடு – தமிழகம் சர்ச்சை தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவி விளக்கம் அளித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 2023 ஜனவரி 4-ம் தேதி அன்று ஆளுநர் மாளிகையில், காசி – தமிழ் சங்கமம் விழாவில் பங்கேற்ற தன்னார்வ தொண்டர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.. அந்நிகழ்ச்சியில் வரலாற்று பண்பாடு பற்றி பேசும் போது காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க ‘தமிழகம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினேன்.. அந்த காலத்தில் ‘ தமிழ்நாடு என்பது இருக்கவில்லை.. எனவே வரலாற்று பண்பாட்டு சூழலில் ‘தமிழகம்’ என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு’ என்ற கண்ணோட்டத்தில் குறிப்பிட்டேன்..
எனது கண்ணோட்டத்தை ‘ தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வதோ அனுமானம் செய்து கொள்வதோ தவறானது.. மேலும் யதார்த்தத்திற்கு புறம்பானது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.. எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப் பொருளாகி இருக்கிறது.. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம்..” என்று குறிப்பிட்டுள்ளார்..