பள்ளிக்கல்வித்துறையில் காலியாக 3,236 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் நடைபெற்ற உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 3,236 பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; நடப்பாண்டில் 2,955 காலி பணியிடங்களும், ஏற்கனவே நிரப்பப்படாமல் காலியாக உள்ள 251 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான திருத்தப்பட்ட பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதற்காக 2020-21 ஆம் ஆண்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை ஒன்று, கணினி பயிற்றுனர் நிலை ஒன்று ஆகிய நேரடி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஆன்லைன் வழி எழுத்து தேர்வு பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்பட்டது.
அதன் முடிவுகள் ஜூலை 4 ஆம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதில் தகுதிப்பெற்றவர்களில் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு 2 பேர் வீதம் சான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலர் ஒரே மதிப்பெண் பெற்று இருப்பதால், அவர்களையும் சேர்த்து சுமார் 8,900 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் 4-ம் தேதி வரையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வளாகத்தில் நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்புக் கடிதம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னர் மட்டுமே வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட தேதியில் நேரில் வருகை புரியாத விண்ணப்பதார்கள் அவர்கள் தகுதியான மதிப்பெண் பெற்றிருப்பினும், அடுத்தக்கட்ட பணித் தேர்விற்கு பரிசீலிக்கப்படமாட்டார்கள்.