சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு இன்றைய தினம் சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களும் செயல்படாது எனவும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். மேலும் சேலம் மாவட்டத்தின் இந்த விடுமுறை ஈடுகட்ட செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தின் இந்த விடுமுறை ஈடுசெய்ய வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும், திருப்பூர் மாவட்டத்தின் இந்த விடுமுறை ஈடுசெய்ய வருகிற ஆகஸ்ட் 26ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி அவர்களின் சிறப்பை போற்றும் வகையில் நாமக்கல் மாவட்டத்திலும் இன்றியாய் தினம் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினத்தில் ஆடிப்பெருக்கு விழா தமிழகத்தில் பெரும் விமர்சையாக கொண்டாடப்படும். ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடப்படும் விழாவே ஆடிப்பெருக்கு ஆகும். இதனை கிராமங்களில் ஆடி 18 ஆம் பெருக்கு என்று கூறுவர். மேலும் மக்கள் இந்நாளில் ஆறுகளை வணங்கி புனித நீராடுவர். குறிப்பாக காவிரி நதி பாயும் பகுதிகளில் இவ்விழா மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், தருமபுரி, ஆகிய 5 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.