உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆற்று வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராம்நகர் கோட்வார் சாலையில் அமைந்துள்ள தேலா மண்டலத்தில் இந்த விபத்து நடந்தது. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஒரு பெண் குழந்தை உட்பட 11 பேர் பயணித்துள்ளனர்… உத்தரகாண்ட் காவல்துறை, மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF), மற்றும் தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். பலியானவர்கள் அனைவரும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
11 பயணிகளில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்ததை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. எனினும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட காரில் இருந்த சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.. அவரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்..
நேரில் கண்ட சாட்சி ஒருவர் கூறுகையில், எர்டிகா கார் ஒன்று அதிகாலை 5 மணிக்கு கார்பெட் தேசிய பூங்கா நோக்கி சென்று கொண்டிருந்தது. வேகமாக வந்த காரை நிறுத்த முயன்றும் நிற்கவில்லை. அப்போது தேலா கிராமத்தின் ஆற்றில் பலத்த நீரோட்டம் காரணமாக ஓடும் நீரில் கார் அடித்து செல்லப்பட்டது..” என்று தெரிவித்தார்..
காவல்துறை டிஐஜி நிலேஷ் ஆனந்த் பர்னி இதுகுறித்து பேசிய போது “இறந்த அனைவரையும் அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயிருடன் மீட்கப்பட்ட ஒரு சிறுமி ராம்நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த ஆற்றில் பாலம் கட்டுவது குறித்து நிர்வாகத்திடம் ஆலோசித்து வருவதாகவும், கடந்த காலங்களில் இங்கு இதுபோன்ற விபத்துகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “ராம்நகரின் தேலா ஆற்றில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதால் கார் விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர் என்ற வருத்தமான செய்தி எனக்கு கிடைத்தது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களுடன் எனது இரங்கல்கள் ” என்று முதல்வர் ட்வீட் செய்துள்ளார்.