கனமழை பெய்து வருவதை ஒட்டி நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மழைப்பொழிவு இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகளில் வயல்களில் சூழ்ந்திருந்த தண்ணீர் வடிய தொடங்கியிருந்தது இதனிடையே இன்று காலை மீண்டும் மழை பெய்ய தொடங்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குறிப்பாக மயிலாடுதுறை, மணல்மேடு ,தரங்கம்பாடி, செம்பனார்கோவில், குத்தாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் கிட்டத்தட்ட 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதாக நேற்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்து இருந்தார் . தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.இதனால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.