உத்தரபிரதேச மாநிலம் குஷாம்பி மாவட்டம் கராரி பகுதியில் உள்ளவர் சஞ்சய் ஜெய்ஸ்வால். இவர் பாரதிய ஜனதா கட்சியின் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கிறார். இந்நிலையில், ஜெய்ஸ்வாலின் மகன் அனந்த் (10) நேற்று தனது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் சேர்ந்து ‘திருடன் போலீஸ்’ விளையாட்டு விளையாடினான். அப்போது, அவனது வீட்டில் இருந்த அவனின் தந்தை ஜெய்ஸ்வாலின் உரிமம் பெற்ற துப்பாக்கியை விளையாட எடுத்துச் சென்றுள்ளான்.
துப்பாக்கிகுண்டுகள் லோட் செய்யப்பட்டு இருந்தது. துப்பாக்கியை அனந்த் எடுத்ததை வீட்டில் யாரும் கவனிக்கவில்லை. அனந்த் அந்த துப்பாக்கியை வைத்து தனது பக்கத்து வீட்டு சிறுவனான வேதாந்தா (11) உடன் சேர்ந்து திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, விளையாட்டுக்காக வேதாந்தா மீது அனந்த் துப்பாக்கியால் சுட்டுள்ளான். பொம்மை துப்பாக்கி என நினைத்து வேதாந்தா மீது அனந்த் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சரியாக சிறுவன் வேதாந்தாவின் மார்பில் துப்பாக்கிகுண்டு பாய்ந்தது. இதனால், அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சிறுவன் வேதாந்தா சுருண்டு விழுந்தான். துப்பாக்கிச்சூடும் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.