இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவனமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) தனது இ கேட்டரிங் பிரிவின் மூலம் ரயில் பயணிகளுக்கு உணவுகளை வழங்குகிறது. இருப்பினும் தாங்கள் விரும்பும் உணவுகளை பெற முடியவில்லை என்ற ஆதங்கம் ரயில் பயணிகளிடம் உள்ளது. இனி அந்த கவலை ரயில் பயணிகளுக்கு இருக்காது.
ரயில் பயணிகள் விரும்பும் உணவுகளை வழங்குவதற்காக ஐஆர்சிடிசி நிறுவனம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ ரயில் பயணிகளுக்கு விருப்பமான உணவை வழங்க களம் இறங்குகிறது. ஐஆர்சிடிசி நிறுவனம் தற்போது பயணிகளுக்கு விருப்பப்படும் உணவுகளை தேர்வு செய்யும் வசதியை வழங்குவதற்காக சொமேட்டோ நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது.
இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக, சொமேட்டோ உதவியுடன் தனது இ கேட்டரிங் வலைதளம் மூலமாக ரயில் பயணிகள் முன்கூட்டியே ஆர்டர் செய்த உணவுகளை பெறும் Proof of Concept என்ற திட்டத்தை ஐஆர்சிடிசி செயல்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக டெல்லி, பிரக்யாக்ராஜ், கான்பூர், லக்னோ மற்றும் வாராணசி ஆகிய 5 முக்கிய ரயில் நிலையங்களில் இத்திட்டத்தை தொடங்கியுள்ளது.