தெலுங்கானா மாநிலம் நிசாமாபாத்தில் தீவிரவாத செயலுக்கு பயிற்சி முகாம் நடத்துவதாகவும், மத ரீதியில் இரு தரப்பினர் இடையே மோதலை உண்டாக்க முயற்சிபதாகவும் கடந்த மாதம் ஜூலை நான்காம் தேதி அப்துல் காதர், ஷேக் ஷகதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் முபின் ஆகிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கு பிறகு தேசிய புலனாய்வு (என்.ஐ.ஏ.) வசம் ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து இந்த வழக்கை மறுபதிவு செய்த என்.ஐ.ஏ. விசாரணையை ஆரம்பித்தது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 40 இடங்களில் தெலுங்கானா, ஆந்திராவில் என்.ஐ.ஏ. இன்று அதிரடி சோதனை நடத்தியது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய மத அமைப்பு தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடந்தது.
பயங்கரவாத செயலுக்கு பயிற்சி முகாம் நடத்துதல், இரு தரப்பினர் இடையே மத ரீதியில் கலவரத்தை உண்டாக்க முயற்சிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தெலுங்கானாவில் 38 இடங்களிலும், ஆந்திராவில் இரண்டு இடங்களிலும் நடந்த இந்த சோதனையில் டிஜிட்டல் சாதனங்கள், ஆவணங்கள், இரண்டு கத்திகள் போன்றவற்றை கைப்பற்றினர். இந்த சோதனை தொடர்பாக நான்கு பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.