சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா – பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் 270 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. அதிகபட்சமாக ஷகீல் 52 ரன்களும், கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும் சேர்த்தனர். தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஷம்சி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 271 ரன்கள் சேர்த்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகளில் வெற்றிபெற்று உலகக்கோப்பை தொடருக்கான புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “மிகவும் ஏமாற்றமாக இருக்கிறது. நாங்கள் நன்றாகத்தான் போராடினோம். ஆனால் 10 முதல் 15 ரன்கள் குறைவாக இருந்து விட்டோம். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் செயல்பட்ட விதத்தில் அவர்கள் நன்றாக இருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். டிஆர்எஸ் என்பது நடுவர்களின் முடிவு. இது விளையாட்டின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனாலும் எங்கள் பக்கம் துரதிருஷ்டவசம் டிஆர்எஸ் இல்லாதது, எங்கள் வீரர்களை ஏமாற்றம் அடைய வைப்பதாக இருந்தது. இந்த போட்டியில் அரையிறுதி வாய்ப்பில் நிலைத்திருக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நாங்கள் அதைத் தவற விட்டு விட்டோம். அடுத்த மூன்று போட்டிகளில் எங்களால் முடிந்த வரை முயற்சிப்போம். மூன்று போட்டிகளுக்குப் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பது குறித்து பார்ப்போம்!” என்று கூறியிருக்கிறார்!