நீட் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து சர்ச்சை நீடித்து வருகிறது. சென்னையில் சமீபத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து அவரது தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது.
திமுக சார்பில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்து விடுவோம் என்கின்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பலனும் இல்லை. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை திமுக நடத்தி வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தின் துவக்கத்தில் பேசிய துரைமுருகன், உதயநிதி இது தொடர்பாக தொடர் போராட்டங்களை தொடர்ந்து அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன் என்றும், அவருடைய காலத்தில் நீட் தேர்வு ஒழிந்தது, அதற்கு காரணம் உதயநிதி என்று இருக்கும் அதற்கான ஆற்றலை கொண்ட உதயநித்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள். கலைஞர் கருணாநிதியுடைய வேகம் உதயநிதிக்கு இருக்கிறது, தளபதி ஸ்டாலினின் திட்டமிடலும் உதயநிதியிடம் இருக்கிறது. நான் மூண்று தலைமுறைகளை பார்த்தவன் அந்த வகையிலையே தான் இந்த மாபெரும் கூட்டத்தை அவரால் தான் சாதிக்க முடியும் என்று நம்புகிறேன் என்று கூறினார்.