தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் மகனும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் தனது பெற்றோருடன் தற்போது வசித்து வருகிறார். அங்கு முதல்வர் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், முதல்வரை பார்ப்பதற்கு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக அங்கு இட நெருக்கடியும் பாதுகாப்பு பிரச்சனையும் உள்ளதால் அமைச்சர்களுக்கான பங்களாவில் குடியேற உதயநிதி ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
அவருக்காக தற்போது சென்னையில் உள்ள குறிஞ்சி என்ற அரசு பங்களா வேகமாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இங்கே இதுவரை சபாநாயகர் அப்பாவு வசித்து வந்த நிலையில், கடந்த ஜனவரியில் அவர் அருகில் உள்ள மலரகம் என்ற பங்களாவுக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் உதயநிதி ஸ்டாலின் அரசு பங்களாவுக்கு குடியேற உள்ளார். 2009ஆம் ஆண்டில் முக.ஸ்டாலின் இதே வீட்டில் குடியேறிய பின்புதான், துணை முதல்வராக ஆனார். தற்போது உதயநிதியும் இந்த வீட்டில் குறியேறுவதன் மூலம் அவரும் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.