தொலைதூர மற்றும் இணையவழி படிப்புகளுக்கான அங்கீகாரம் பெற உயர்கல்வி நிறுவனங்கள் நாளை மாலை வரை விண்ணப்பிக்கலாம்.
நடப்பு கல்வியாண்டில் (2025-26) ஜூன் பருவத்தின் சேர்க்கைக்கான தொலைதூர படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து யுஜிசி ஒழுங்குமுறை விதிகளின்படி முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள், தொலைதூர, இணைய வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 4-ல் தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஏப்ரல் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. கால அவகாசம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இதையடுத்து தகுதியான கல்வி நிறுவனங்கள் /deb.ugc.ac.in/ எனும் வலைதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் சேர்த்து ஏப்ரல் 30-ம் தேதிக்குள் டெல்லியில் உள்ள யுஜிசி தலைமை அலுவலகத்தில் வந்து சேரும்படி கல்வி நிறுவனங்கள் அனுப்பிவைக்க வேண்டும். தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியான பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இதுதொடர்பான விதிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.