உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட பலரை ரஷ்ய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளனர். மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு எதிராக குற்ற வழக்கு ஒன்றையும் ரஷ்யா பதிவு செய்துள்ளது.
உக்ரைனுக்கு எதிராக 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து, உக்ரைன் மக்கள் பலர் மற்றும் பிற ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு எதிராக ரஷியா கைது வாரண்டுகளை பிறப்பித்து உள்ளது. இதன்படி, எஸ்தோனியா நாட்டு பிரதமர் காஜா கல்லாஸ், லித்துவேனியா நாட்டின் கலாசார மந்திரி மற்றும் லத்விய நாட்டின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை ரஷிய போலீசார் தேடப்படுவோர் பட்டியலில் வைத்தனர். சோவியத் நாடாக இருந்த காலத்தில் இருந்த நினைவு சின்னங்களை அவர்கள் அழித்து விட்டனர் என கூறி இந்த பட்டியலில் அவர்கள் வைக்கப்பட்டனர்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கறிஞர் மீதும் கடந்த ஆண்டில் ரஷியா கைது வாரண்டுகளை பிறப்பித்தது. இந்நிலையில், ரஷ்யா உள்துறை அமைச்சரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ரஷ்யாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளது அதிகாரப்பூர்வமாக தெரியவந்துள்ளது. எனினும், இந்த தகவலை உக்ரைன் நிராகரித்து உள்ளது.
இதுபற்றி உக்ரைனின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்ய சர்வாதிகாரி விளாடிமிர் புதினுக்கு எதிராக போர் குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்படுவதற்கான வாரண்ட்டை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இது 123 நாடுகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.