தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான சின்னகண்ணு. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், இவரது 3 மகன்களும் தனித்தனியாக அவர்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதனால் மூதாட்டி மட்டும் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் முன்பு, மூதாட்டி ரேசன் கடைக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர், நான் உங்கள் உறவினர் என கூறி, அறிமுகமாகியுள்ளார். மேலும், “எனக்கு பசிக்கிறது சாப்பிட எதாவது கொடுங்கள்” என மூதாட்டியிடம் கேட்டுள்ளார். இதனால் மனம் இறங்கிய மூதாட்டி, அந்த நபரை தனது வீட்டிற்க்கு அழைத்து சென்றுள்ளார்.
வீட்டிற்க்கு சென்ற பிறகு, அந்த நபர் மூதாட்டிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். இதனை குடித்த மூதாட்டி மயங்கியதை அடுத்து, மூதாட்டி அணிந்திருந்த சுமார் 5 பவுன் தங்க நகைகள், மற்றும் வீட்டிலிருந்த பணத்தையும் அந்த மர்ம நபர் திருடியுள்ளார். மேலும், மயங்கிய மூதாட்டியை வீட்டிற்குள்ளயே படுக்க வைத்து விட்டு வீட்டின் கதவினை வெளிபக்கமாக தாழ்ப்பாள் போட்டு விட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். மூதாட்டி வெகு நேரமாக வீட்டிற்க்கு வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் குறித்து, மூதாட்டியின் மகன் ராஜமாணிக்கம் கொடுத்த புகாரின் பேரில், பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு முன் வீட்டில், தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டியியை நோட்டமிட்டு, மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.