யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில், இந்திய அளவில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்தாண்டு ஜூன் மாதம் 5ஆம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிச. 6 ஆம் தேதி வெளியானது. அடுத்த நிலையான நேர்காணல் கடந்த மே 18 ஆம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தேர்வர்கள் தங்களது முடிவுகளை, upsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். 180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,011 இடங்களுக்கு நடத்தபட்ட தேர்வில், மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முதல் 4 இடங்களை பெண்கள் பிடித்து அசத்தியுள்ளனர். இந்தியளவில் இஷிதா கிஷோர் முதலிடமும், கரிமா லோகியா இரண்டாம் இடமும், உமா ஹராதி மூன்றாம் இடமும், ஸ்மிரிதி மிஷ்ரா நான்காம் இடமும் பிடித்துள்ளனர்.