கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியாக உள்ள 731 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியான 731 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றது.
டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய தேர்வாணைய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 17ம் தேதி கடைசி நாள். இணைய வழியில் டிசம்பர் 22ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் டிசம்பர் 24ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம். தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. கணினி வழியில் இந்த தேர்வு நடைபெறும்.
காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல் (பட்டப்படிப்பு தரம்), பிற்பகல் 2.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும் நடைபெறும். பகுதி ‘அ’வில் கட்டாய தமிழ்மொழி தகுதி தேர்வு , பகுதி ‘ஆ’ பொது அறிவு தேர்வும் நடைபெறும். கணினி வழித்தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்படும். தொடர்ந்து ஜூனில் சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முக தேர்வு நடக்கிறது. அந்த மாதமே கலந்தாய்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.