வாரத்தின் 6 நாட்கள் எதைப்பற்றியும் கவலை இல்லாமல், எந்தவித சிந்தனையும் இல்லாமல் வேலை, வேலை என்று ஓடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் வார இறுதியில் குடும்பத்துடன் வெளியே சென்று குதூகலமாக இருப்பதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அனைவரின் வாழ்விலும் இந்த வார இறுதி நாள் மகிழ்ச்சியை பதிவு செய்யும் என்று நினைத்த நிலையில், இந்த வார இறுதி நாள் ஒரு குடும்ப உறுப்பினர்களுக்கு மாறாத சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கின்ற ரஃபேல் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ், இவருடைய மனைவி ஜோதி சோனார்(32). இந்த தம்பதி தங்களுடைய 3 குழந்தைகளுடன் கடந்த 9ம் தேதி கடற்கரைக்கு செல்வதற்கு திட்டமிட்டு அங்கு சென்றிருந்தனர்.
அந்தப் பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டதால், மிகப் பெரிய அலைகள் எழுந்து அச்சுறுத்தியது. அவர்கள் அந்தப் பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதன் பிறகு தங்களுடைய திட்டத்தை மாற்றி பாந்த்ரா துறைமுகத்திற்கு சென்றுள்ளனர். அங்கும் கடல் சீற்றம் அதிகரித்து தான் காணப்பட்டதாம்.
இந்த சூழ்நிலையில், முகேஷ்- ஜோதி தம்பதியினர் பாந்த்ரா பேண்ட் ஸ்டாண்ட் கடற்கரையில் சற்று தூரத்தில் இருந்த பாறையில் அமர்ந்து வீடியோ மற்றும் புகைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தனர். இந்த தம்பதியின் குழந்தைகள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த நிலையில், கணவரின் கையை கோர்த்தபடி மகிழ்ச்சியாக ஜோதி வீடியோவுக்கு போஸ் கொடுத்து கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக ஒரு மிகப்பெரிய ராட்சத அலை அவர்களை நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனை கவனித்த குழந்தைகள் மம்மி, மம்மி என்று கூச்சலிட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மிகப்பெரிய ராட்சத அலை முகேஷ்-ஜோதி தம்பதியை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அப்போது முகேஷ் தன்னுடைய மனைவியின் சேலையை பிடித்து இழுக்க முயற்சி செய்தும் அவர் கடல் நீரில் மூழ்கி போனார்.
ஆனாலும் இதனை கவனித்துக் கொண்டிருந்த நபர்கள் முகேஷின் கால்களை பிடித்து இழுத்து அவரை ஒரு வழியாக காப்பாற்றினர். அதோடு, உடனடியாக காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. ஆகவே தீயணைப்பு துறை வீரர்களுடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் காவல்துறையினர்.
இந்த நிலையில், கடல் நீரில் மூழ்கிய நிலையில், ஜோதியின் உயிரற்ற உடல் கடந்த 10 ஆம் தேதி காலை இந்திய கடலோர காவல் படையால் மீட்கப்பட்டது. அதன் பிறகு காவல்துறையிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டு கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோவில் பதிவாகி இருந்த நிலையில், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பார்வையாளர்களை பதற வைத்திருக்கிறது.