அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பை தலை வணங்குகிறோம். ஆனால், தற்போது வழங்கப்பட்டுள்ள 126 பக்கமுள்ள தீர்ப்பில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. முந்தைய தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது. தற்போது எங்களுக்கு எதிராக உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து விரைவில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்.

வழக்கறிஞர்களுடன் இது தொடர்பாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஓரிரு நாளில் மேல்முறையீடு செய்யப்படும். உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி இல்லை என்று சொல்லும் போது உச்சநீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்வது வழக்கம். அதன்படி, அப்பீல் செய்வோம். தற்போது வழங்கி உள்ள தீர்ப்பு ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவை சுற்றியுள்ளது. ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவை கண்டு கொள்ளவில்லை. தொண்டர்கள் முழுவதும் எங்கள் பக்கம் உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். கட்சி தலைமை அலுவலகத்துக்கு யாரும் செல்லலாம். சேலத்தில் விரைவில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், மாநாடு நடத்தப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.