மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு புதன்கிழமை தாக்கல் செய்தார்.
இஸ்லாமிய மதத்தில் இறை பணிகளுக்காக அளிக்கப்படும் அசையும், அசையா சொத்துகள் மற்றும் நன்கொடைகளை வக்பு என்பார்கள். இந்த வக்ஃபு சொத்துக்கள் நிர்வாகம் செய்வதற்கு 1954 ஆம் ஆண்டு வக்ஃபு வாரிய சட்டம் கொண்டு வரப்பட்டது. இதை ஒழுங்குபடுத்த 1995, 2013 ம் ஆண்டுகளில் வஃக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
தொடர்ந்து இந்த மசோதாவுக்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது. ஜெகதாம்பிகா பால் தலைமையிலான கூட்டுக் குழுவில் பாஜக கூட்டணியை சேர்ந்த 16 எம்பிக்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த 10 எம்பிக்கள் இடம்பெற்றிருந்தனர். கூட்டுக்குழு சார்பில் பலமுறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று, ஒவ்வொரு பரிந்துரை தொடர்பாகவும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரைத்த மாற்றங்கள் ஏற்கப்பட்டன.
தொடர்ந்து கூட்டுக் குழுவினர் கடந்த ஜனவரியில் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், வக்ஃபு வாரிய சட்டத்தில் 44 திருத்தங்கள் செய்யப்பட்ட 655 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை கடந்த பிப்வரியில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சூழலில் வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்கள் தொடர்பாக அனைத்துக் கட்சிகளும் விவாதம் நடத்தி வருகின்றனர்.
இந்த மசோதாவுக்கு இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றவுள்ளார். இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்றும், தேவைப்படும்பட்சத்தில் விவாத நேரத்தை அதிகரிக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.