சி.பி.எஸ்.இ கல்வி வாரியத்தின் பெயரில் போலி இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அந்த அமைப்பு மாணவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சி.பி.எஸ்.இ செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் படி ‘சி.பி.எஸ்.இ. அதிகாரபூர்வ இணையதளமான www.cbse.gov.in-ஐ போல, போலி இணையதளம் ஒன்றை cbsegovt.com என்ற பெயரில் சில சமூக விரோதிகள் உருவாக்கி உள்ளனர். 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்குவதற்கு பணம் டெபாசிட் செய்யுமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு செய்திகளை அனுப்பி அப்பட்டமாக ஏமாற்றும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன’ என கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் மாணவர்கள் மிகுந்த கவனமுடன் இருக்குமாறும், மேற்படி இணையதளத்தில் பணம் செலுத்த வேண்டாம், ஹால் டிக்கெட் பதிவிறக்கத்துக்கு நேரடியாக ஒருபோதும் பணம் கேட்பதில்லை என்றும் சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது. எனவே இந்த விவகாரத்தில் மாணவர்கள் உஷாராக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.