கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா – தமிழ்நாடு இடையே காவிரி நதிநீர் பங்கீடு குறித்த பிரச்சனை தீவிரமாகி வருகிறது. கர்நாடகா உரிய நீரை வழங்காததால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. காவிரியில் இருந்து கூடுதல் நீர் திறக்க வேண்டும் என கோரிக்கையையும் வைத்துள்ளது. ஆனால், கர்நாடகாவில் நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை என்பதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 123 ஆண்டுகளில் இல்லாத அளவில் வறட்சி நிலவுவதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
53 டிஎம்சி நீர் மட்டுமே இருப்பு உள்ளதால், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடக்கூடிய சூழல் இல்லை என்றும் கர்நாடகத்தின் நீர் தேவையை பூர்த்தி செய்யவே 70 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது எனவும் சித்தராமையா கூறியுள்ளார். இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகி காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவிடம் மனு தாக்கல் செய்வோம் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.