பாரம்பரிய நெல் வகைகளை பயன்படுத்துவதோடு, வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடையுமாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாட்டில் உள்ள வேளாண் பெருமக்களின் நலன் காத்து, வருவாயை பெருக்கிட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து, தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.

மரபுசார் நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில், 2021-2022ஆம் நிதியாண்டில் நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் எனும் திட்டம் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அறுவதாம் குறுவை, ஆத்தூர் கிச்சிலி சம்பா, செங்கல்பட்டு சிறுமணி, கருடன் சம்பா, கருங்குருவை, கருப்பு கவுனி, கீரை சம்பா, கொல்லன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, சிவப்பு கவுனி, சிவன் சம்பா, தங்க சம்பா, தூயமல்லி, பூங்கார் போன்ற பாரம்பரிய நெல் வகைகள் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தவை.

இத்தகைய மரபுசார் நெல் ரகங்களைத் திரட்டி, பலமடங்காக பெருக்கி, விவசாயிகளுக்கு விநியோகம் செய்து அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், தேனி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள 33 அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கர் பரப்பளவில் மேற்கண்ட 15 பாரம்பரிய நெல் ரகங்களை 200 மெட்ரிக் டன் அளவு உற்பத்தி செய்துள்ளது. இந்த நெல் விதைகள், நடப்பாண்டில் 10,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில், 50% மானியத்தில், அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.12.50 என்ற மானிய விலையில் ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்குத் தேவையான விதைகள், அதிகபட்சமாக 20 கிலோ மட்டுமே என்ற அடிப்படையில் விநியோகிக்கப்படும். இத்திட்டமானது சென்னை மற்றும் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும்.

மரபுசார் நெல் ரகங்களை பாதுகாப்பதற்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மரபுசார் நெல் ரகங்கள் இனத் தூய்மையுடன், விதைத் தரத்துடன் விநியோகம் செய்யப்படுவதால், இத்தகைய ரகங்களின் சாகுபடிப் பரப்பு கணிசமாக உயரும். பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு நடப்பு சம்பா பருவம் மிகவும் உகந்தது என்பதால், ஆர்வமுள்ள விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி, பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து பாரம்பரிய மரபுசார் நெல் ரகங்களை வருங்கால தலைமுறைக்கும் பயன்படும் வகையில் பாதுகாத்து பயனடைய வேண்டும்”. இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.