திமுக தேர்தல் வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் ரூ.1,000 வழங்க வேண்டும் எனவும், காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் தேமுதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் அரங்கம் அருகே தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், ”திமுகவில் சிலை மட்டும் திறந்து வைக்கிறார்கள். அடிப்படை தேவைகள் எதுவும் செய்யவில்லை. தேர்தல் வாக்குறுதி படி புகார் பெட்டி வைக்கவில்லை. அப்படி வைத்திருந்தால், மொத்த புகாரும் திமுக மீது தான் இருக்கும். நேரம் இல்லை என கூறும் முதல்வர் 4 மணி நேரம் ஐ.பி.எல்.மேட்ச் பார்க்கிறார். உயநிதி நடிப்பதும் நடிக்காமல் இருப்பதும் அவரது இஷ்டம். விளையாட்டு துறையில் என்ன என்ன மேம்பாட்டை செய்துள்ளீர்கள்..?
திமுக ஃபோட்டோ ஷூட் ஆட்சி நடத்துவதாக விமர்சனம் செய்த பிரபாகரன், சொந்த பணத்தை மக்களுக்கு செலவு செய்த ஒரே கட்சி தேமுதிக என்றும் எங்கள் கட்சி எப்போதும் சூப்பர் கட்சி தான் என்றும் பேசினார். குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான் என விஜயகாந்த் குறித்து பேசிய அவர், அவர் ஓய்வு எடுக்கட்டும். அவரது பணியை நாம் செய்வோம். அப்பாவின் கனவை நிறைவேற்ற இங்கு வந்துள்ளேன்” என்றார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அமலாக்கத்துறை காரணம் இல்லாமல் செந்தில் பாலாஜியை விசாரணை செய்ய மாட்டார்கள். மொத்த திமுக குடும்பம் மற்றும் திமுக நிர்வாகிகளும் இந்த விவகாரத்தில் மாட்டுவார்கள். மணிப்பூர் பிரச்சனையில் பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும். மணிப்பூரில் பெண்கள் பாதிக்கப்பட்டதிற்கு முற்றிலுமாக பாஜக மீது பழி போட முடியாது. நான் பா.ஜ.க-வை ஆதரிக்கவில்லை, மணிப்பூர் பிரச்சனைக்கு மாநில அரசு பொறுப்பு ஏற்க வேண்டும். அண்ணாமலை நடைபயணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதனால் தேமுதிக ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் அதில் கலந்துகொண்டார். இதனால் பாஜகவுக்கு ஆதரவு என்பது இல்லை” என விளக்கம் அளித்தார்.