உழவன் செயலி மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் விவசாயிகளிடையே பிரபலமாகிவரும் உழவன் செயலியினை இதுவரை, சுமார் 12,70,000 பயனாளிகள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த செயலி மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் போன்று பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களையும் விளைபொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும் விவசாயிகள் தெரிந்து கொள்ளாலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

உழவன் செயலியின் மூலம் வழங்கப்படும் சேவைகள்
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.
வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான இடுபொருட்களையும் பெறுவதற்கு பதிவு செய்திடலாம்.
அறிவிக்கப்பட்ட கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள், அணுக வேண்டிய இடங்கள் மற்றும் பயிர்க்காப்பீட்டின் தற்போதைய நிலை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
தனியார், கூட்டுறவு விற்பனை நிலையங்களில் உள்ள இரசாயன உரங்களின் இருப்பு, விலை பற்றிய விவரங்கள் பற்றி அறியலாம்
வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளில் உங்கள் அருகில் உள்ள கிடங்கில் தினசரி விதை இருப்பு மற்றும் கன்றுகள் இருப்பு மற்றும் வேளாண் பொறியியல் துறை மற்றும் விவசாயிகளிடம் வாடகைக்கு உள்ள இயந்திரங்கள், வாடகை, வாடகை முன் பதிவு பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள முடியும்,
ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள், உழவர் சந்தைகளில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் தினசரி சந்தை விலை மற்றும் மாவட்ட வாரியாக தினசரி வானிலை முன்னறிவிப்பு மற்றும் தமிழ் மொழியில் உள்ளூர் வானிலையாளர் அன்றாடம் வழங்கும் வானிலை முன்னறிவிப்புகளை செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வேளாண்மை தொடர்பான அறிவிப்புகள், துறையின் பத்திரிக்கை வெளியீடு, தொழில்நுட்பங்கள், விலை முன்னறிவிப்புகள். திட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

வேளாண், தோட்டக்கலை பயிர்களுக்கு விதைப்பு முதல் அறுவடை வரை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்களை செயலியில் தெரிந்து கொள்ள முடியும்.
உங்கள் கிராமங்களுக்கு வருகை தரும் உதவி வேளாண்மை/தோட்டக்கலை அலுவலர்களின் பெயர், கைபேசி எண், போன்ற விவரங்கள்.
தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் மேட்டூர் நீர்த்தேக்கத்திற்க்கு ஆதாரமாய் விளங்கும் கர்நாடகாவின் உள்ள நான்கு முக்கிய அணைகளின் தினசரி நீர் அளவு.
அங்கக முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் சான்றளிப்பு முகமைகள் பற்றிய விவரங்கள்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் விவரங்கள், அவர்களின் தயாரிப்புகள் பற்றிய தகவல்கள். பூச்சி, நோய் மேலாண்மைக்கு தேவையான பரிந்துரைகள்.
அட்மாத் திட்டத்தில் வேளாண் செயல்விளக்கம், கல்விச் சுற்றுலா போன்ற வேளாண் தொழில்நுட்ப பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் தேவை விவரங்கள்.
பட்டுக்கூடு கிடைக்கும் இடம், சந்தை விலை மற்றும் பட்டு வளர்ப்புத் துறை தொடர்பான திட்ட விவரங்கள்.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் தொடர்பான விபரங்கள்.
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்: விவசாயிகள் தங்கள் தரிசு நிலத்தை சாகுபடி நிலமாக மாற்ற பதிவு செய்து கொள்வதற்கான வழி வகை.
தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள் உள்ளிட்டவற்றை, உழவன் செயலியினை ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐபோன் (iPhone) ஆகிய இரண்டு கைபேசியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், https://www.tnagrisnet.tn.gov.in அல்லது https://tnhorticulture.tn.gov.in அல்லது https://aed.tn.gov.in இணையதளம் மூலமாகவும் திட்டம் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு விவசாயிகள் பயனடைய வேண்டும்” என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.