ஈரான் நாட்டில் நடந்துள்ள மற்றொரு சம்பவம் பெண் அடிமைத்தனத்தின் உச்சகட்டமாக உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான ஈரானில் பிற்போக்குத்தனமான பழமைவாத சட்டங்கள் பல நடைமுறையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானில் விதிக்கப்பட்ட கடுமையான ஆடை கட்டுப்பாட்டிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியை காவல்துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் உலகையே உலுக்கியது. இந்நிலையில் ஈரானில் நடைபெற்ற மற்றொரு சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு நச்சுவாயுவை சுவாசிக்க வைத்ததாக எழுந்துள்ள புதிய சர்ச்சை உலகையே அதிரச் செய்திருக்கிறது.
ஈரான் தலைநகரான டெகரானுக்கு அருகில் உள்ள புனித நகரான கோம் நகரில் தான் இந்த கொடிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அங்கு பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு நச்சு வாயு செலுத்தப்பட்டதாக கூறி நூற்றுக்கணக்கான பெண் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெண் கல்வி கற்பதை தடுப்பதற்காக இது போன்ற கொடுமையான சம்பவம் நடந்துள்ளதாக ஈரானின் இணை அமைச்சர் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து பேசியிருக்கும் ஈரானின் சுகாதாரத்துறை அமைச்சர் கோம் நகரில் உள்ள சில பள்ளிகளில் மாணவிகளுக்கு விஷவாயு செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தார். இது தொடர்பாக உளவுத்துறை மற்றும் அந்நாட்டின் காவல்துறை தீவிரமான விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாகவும் ஈரான் அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.