ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டம் அருகே உள்ள பாகநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7:20 மணி அளவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்கு உள்ளானது. பெங்களூர் ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் உள்ளிட்ட 3 ரயில்களும் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கோரமண்டல் ரயிலில் கவாச் என்ற ரயில் பாதுகாப்பு கருவி மட்டும் இருந்திருந்தால் ஓடிஸா ரயில் விபத்தை தவிர்த்து இருக்கலாம் என்று ரயில்வே துறை உறுதி செய்து இருக்கிறது. ரயில்வே துறை செய்தி தொடர்பாளர் அமிதாப்சர்மா தெரிவித்ததாவது, ஒடிசாவில் விபத்து நடைபெற்ற வழித்தடத்தில் கவாச் கருவி பொருத்தப்படவில்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
ரயில் மோதல்களை தவிர்ப்பதற்காக கவாச் என்ற அதிநவீன மின்னணு தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட வேகம், சிக்னலை கடந்து ரயில் சென்றால் கவாஜ் கருவி மூலமாக எச்சரிக்கை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தில் தாமாகவே பிரேக் போட்டு ரயில் நிறுத்தப்படும். இதுதான் கவாச் கருவியின் சிறப்பம்சமாகும். கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இந்த கருவி ரயில் பாதுகாப்பு காரணமாக உருவாக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதோடு, இந்த கருவி தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் விளக்கம் அளிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சாகித் கோக்கலே ரயில் வழித்தடங்களில் இரண்டு சதவீதம் மட்டுமே இந்த கருவி பொருத்தப்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.