இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு 2023 மே 7 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் நுழைவு தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 17ஆம் தேதி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இந்நிலையில், அடுத்த வருடத்திற்கான நீட் தேர்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளன.

மருத்துவக் கல்லூரிகள், மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. அதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு அடுத்த ஆண்டு மே 7 ஆம் தேதி நடத்தப்படுகிறது. பொறியியல் படிப்புக்கான ஜெ.இ.இ. மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன. இதேபோல மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான நுழைவு தேர்வு மே 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.