குழந்தையைக் காண வரும் பிரிந்த கணவரை விருந்தினரைப் போல நடத்துங்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்தான தன் மனைவியிடம் வளரும் குழந்தையை பார்ப்பதற்கு உரிமைக் கோரி, ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ”விவாகரத்துக்கு பின்பு சில மனைவிகள் குழந்தைகள் முன் தவறாக நடந்து கொள்வதாகவும், சண்டையிடுவதாகவும் அறிய முடிகிறது. விவாகரத்தான மனைவி கணவனையோ, அல்லது கணவன் மனைவியையோ சம மரியாதையோடு, வெறுப்பை விழுங்கி அன்போடுதான் நடத்த வேண்டும் என நான் கூறமாட்டேன்.
ஆனால், மனித நேயத்துடன் நடத்தலாம். எது மனிதநேயம்? தங்கள் குழந்தைகள் முன் ஒருவர் மீது ஒருவர் அன்பாக நடந்துக்கொள்ளலாம் அல்லது குறைந்தபட்சம் ஒரு விருந்தினராக கூட நடத்தலாம். ஏனெனில், நமது பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளில், ஒரு விருந்தினரை ‘அதிதி தேவோ பவ (விருந்தினர் கடவுள்)’ எனக் கருதுகிறோம். எனவே, குழந்தையைக் காண பிரிந்த கணவர் வரும்போதெல்லாம் விருந்தோம்பல் செய்து, சிற்றுண்டிகளை வழங்கி, இரவு உணவை ஒன்றாகச் சேர்த்து சாப்பிட்டு குழந்தையை மகிழ்ச்சியாக உணரும்படி செய்யுங்கள்” எனக் கூறினார்.