விவாகரத்து செய்து கொள்ளும் தம்பதி, குழந்தைகளை யார் வைத்துக் கொள்வது என்பதில் மிகப்பெரிய போராட்டமே நடத்துகின்றனர். இந்த விவகாரத்தில் அதிகமான நேரங்களில் நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கிறது. மத்தியப்பிரதேசத்தில் அரசுப் பணியில் இருக்கும் ஒரு தம்பதி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர். ஆனால், அவர்களின் மைனர் மகள், தந்தையின் கவனிப்பில் இருந்து வருகிறார். 2021இல் அத்தம்பதிக்கு விவாகரத்தும் கொடுக்கப்பட்டுவிட்டது.
ஆனால், கடந்த 2019இல் குழந்தையின் அம்மா இந்தூர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ”என் மகள் முக்கியமான வயதில் இருக்கிறார். இந்த நேரத்தில் அவளது பயம், ஆர்வம், உடல் மாற்றம் குறித்து வழிகாட்ட அம்மா போன்ற ஒரு துணை தேவை. எனவே, என் மகளை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த மனு குடும்ப நீதிபதி பிரவீனா முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “10 வயதாகும் சிறுமி பருவத்தை எட்டும் நிலையில் இருக்கிறார். இது போன்ற சூழ்நிலையில் சிறுமியின் அனைத்து வகையான வளர்ச்சி மற்றும் உணர்வுகளை புரிந்து கொள்ள தாயின் பாதுகாப்பில் இருப்பதுதான் சிறுமியின் நலனுக்கு நல்லது” என்று கூறி சிறுமியை அவரின் தாயிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். சிறுமியை அவரின் தந்தை வார விடுமுறை நாட்கள், கோடை விடுமுறை நாட்களில் ஒப்புதல் பெற்று சந்தித்துப் பேசலாம் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.