பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு காவல் துறையினர் சார்பில் அபராதம் விதிக்கப்படும் என்று பெருநகர சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களான மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-ன்படி ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுமென்றும், மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிகை அதிகரிப்பு காரணமாக, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும். சென்னை மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் சரியாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.