தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கவும், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக முதலீட்டாளார்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று சிங்கப்பூர் சென்றடைந்த முதல்வர் முக.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களான டெமாசெக், செம்கார்ப், கேப்பிட்டாலாண்டு இன்வெஸ்ட்மென்ட் நிறுவன உயர் அலுவலர்களை தனித்தனியாக சந்தித்தார். தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்து அழைப்பு விடுத்ததுடன், முதலீட்டாளர் மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வின் போது தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும், சிங்கப்பூரில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (சிப்காட்) பேம்டிஎன் (FameTN), டான்சிம் (TANSIM) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTD (Singapore University of Technology & Design), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு SIPO (Singapore India Partnership Office) மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு SICCI (Singapore Indian Chamber of Commerce and Industries) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில், முதலமைச்சர் முக.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணம் குறித்து அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், காணாமல் போன உங்களின் முதல்வன்? என்ற தலைப்போடு, திராவிட முதல்வர் ஸ்டாலினின் ஜப்பான், சிங்கப்பூர் சுற்றுப்பயணம் முடியும் வரை தமிழ்நாட்டுக்கு முதல்வர் யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.