புதுச்சேரியில் மறைந்த முன்னாள் முதலஅமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், ”திராவிட இயக்கங்களால் தான் கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகிக்கிறார்” என்று பேசினார். ஆ.ராசாவின் பேச்சுக்கு ஆளுநர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாங்கள் கடுமையாக படித்ததால் தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். அவர்களை தூக்கிக் கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக் கல்லூரியில் படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டில் படித்தேன்.
சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது. சனாதனம் என்றால் சாதி மட்டும் தான் என சொல்கிறார்கள். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள். திமுகவில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதல்வர் பதவி தர மறுக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.
உங்கள் கட்சியில் உங்களைப்போல ஒருவர் தலைவராக வர முடியுமா? உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுக-வில் இல்லையா? ஆனால் அவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? முதல்வராகவோ ஆக்கிவிட முடியுமா? நீங்கள் எதையும் செய்வதில்லை. தமிழ்நாடில் கல்வியில் உயர காமராஜர் போட்ட விதை. நீங்களே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள்” என்று காட்டமாக தெரிவித்தார்.