பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வருபவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). இவர் பாஜக பிரமுகராக இருந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி சாமுவேல் (15) என்ற மகனும், சரவணன் (13) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு சண்முகசுந்தரம் உயிரிழந்துவிட்டார்.
இதனால், சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் உதயசூரியத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். மேலும், கணவன் – மனைவி இருவரும் டிராவல்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடையை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தான், நேற்றிரவு (மே 5) பாலன் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அதேபோல், சரண்யாவும் கடையை பூட்டி விட்டு ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், சரண்யாவின் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனே வாட்டாத்திகோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், அங்கு வந்த போலீசார், சரண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் சரண்யா முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.