சேலம் அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை தனியாக அழைத்துச் சென்று, கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சினையை பேசி முடிப்பதாக தெரிவித்து, மனைவியை கொடூரமான முறையில் எரித்து கொலை செய்த கணவனை, காவல்துறையில் ஒப்படைத்த மாமியாரால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலத்தை சார்ந்த கோகிலவாணி என்பவர் ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். இவருக்கும் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே, வாசித்து வந்த முரளி கிருஷ்ணன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இத்தகைய சூழ்நிலையில் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர்களுக்கு தெரியாமல், அலைபாயுதே திரைப்பட பாணியில் திருமணம் செய்து கொண்டு, அவரவர் வீட்டில் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் முரளி கிருஷ்ணன் அவ்வப்போது மனைவியை பார்ப்பதற்காக சேலத்திற்கு வந்து சென்றார்.
பின்னர் கணவன், மனைவி இடையே மன வருத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, கணவனை இனி சேலத்திற்கு வர வேண்டாம் என்று கூறியுள்ளார். அதோடு தன்னுடைய கணவனிடம் பேசுவதையும் அவர் நிறுத்திவிட்டார்.
இதன் காரணமாக, முரளி கிருஷ்ணாவின் மனைவி கோகிலவாணியின் மீது முரளி கிருஷ்ணாவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு மனைவியை ரகசியமாக கண்காணித்து வந்த முரளி கிருஷ்ணன், அவர் பல்வேறு ஆண்களோடு உரையாடி வருவதை கண்டுபிடித்து, அதிர்ச்சியில் உறைந்தார். இந்த சூழ்நிலையில் தான் இனிமேல் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று முரளி கிருஷ்ணன் மனைவியை எச்சரித்தார். ஆனாலும், கோகிலவாணி தன்னுடைய விருப்பப்படி இருந்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் கடந்த 23ஆம் தேதி திடீரென்று சேலத்திற்கு வந்த முரளி, தன்னுடைய மனைவியை சந்தித்து நாம் இருவரும் தனியாக பேசி தங்களுக்குள் இருக்கும் மனக்கசப்பை தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து, அந்த பகுதியில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதன் பிறகு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் முரளி அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கோகிலவாணியை சரமாரியாக குத்தி, கொலை செய்துவிட்டு பின்னர் அவரை யாரும் அடையாளம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, அவருடைய முகத்தில், பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துள்ளார்.
இது பற்றி தன்னுடைய தாயிடம் முரளி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் மகனை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய மருமகளை தன்னுடைய மகன் கொலை செய்துவிட்டார் என்று தெரிவித்து, காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்துள்ளார்.
அதன் பின்னர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பிணமாக கிடந்த அந்த பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட முரளி கிருஷ்ணாவிடம், விசாரணை நடத்திய போது தன்னுடைய மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை கொலை செய்ததாக தெரிவித்து, காவல் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், காவல்துறையினர் அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.