இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் இன்று 6,000-ஐ கடந்துள்ளது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், அரசு மருத்துவமனைக்கு வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. மேலும் தமிழகத்தில் தினசரி 11,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது..
இந்த நிலையில் தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார்.. கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் “ நாடு முழுவதும் ஓரே நாளில் 6050 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பில் உள்ளவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவ கட்டமைப்பு குறித்து நாடு முழுவதும் மாதிரி ஒத்திகை நிகழ்வு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் பன்னாட்டு விமான நிலையங்களில் 2% ரேண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. விமான நிலையங்களில் கூடுதல் பரிசோதனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்..
தற்போது கொத்து கொத்தாக பரவும் க்ளஸ்டர் பாதிப்பு இப்போது இல்லை. தனிநபர் பாதிப்பு தான் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.. தமிழகத்தில் போதிய அளவில் ஆக்சிஜன் உள்ளது.. எனினும் அனைவரும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.. தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்..தமிழகத்தில் லாக்டவுன் போடும் நிலைமை எல்லாம் வரவில்லை.. எனவே, லாக்டவுன் இல்லை..” என்று தெரிவித்தார்..