தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த வருடம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் நகர்ப்புறங்களில் வெள்ளைப் போர்டு கொண்ட பேருந்துகளிலும் கிராமப்புறங்களில் நகரப் பேருந்துகளிலும் செயல்படுத்தப்பட்டது. இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் கடந்த அக்டோபர் 5ம் தேதி வரை 176.84 கோடி பயணங்களும், நாள் ஒன்றுக்கு சராசரியாக 39.21 லட்சம் பயணங்களும் இந்த திட்டத்தின் கீழ்மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் தொடர்பாக மாநில திட்டக்குழு நடத்திய ஆய்வில், இந்த இலவசப் பேருந்து பயணம் மூலம், ஒரு மாதத்திற்கு சராசரியாக 888 ரூபாய் சேமிப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் இதன் மூலம் தினசரி போக்குவரத்து செலவுக்கு குடும்ப உறுப்பினர்களை நம்பி இருப்பது குறைந்துள்ளதாகவும், போக்குவரத்து செலவுகளில் மிச்சம் ஆகும் தொகையை வீட்டு செலவுக்கு பயன்படுத்தி கொள்வதும் தெரியவந்துள்ளது. மேலும் பெண்கள் இந்த இலவச பயணம் மூலம் ஒரு வருடத்திற்கு 10,656 ரூபாய் சேமிக்கலாம் என்று தெரிய வருகிறது.