டிஜிட்டல் இந்தியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, வேலை கொடுப்பதாகக் கூறி பணம் கேட்டு மோசடிகள் நடைபெற்றுவருகின்றன என்று அனைவரும் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
படித்து விட்டு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் சிலர் கிடைத்த வேலையை செய்து வாழ்க்கையை நடத்துகின்றனர். மேலும், சிலர் தான் படித்த படிப்பிற்கான வேலை கிடைக்கும் வரை வேலை வாய்ப்பு மையத்தில் பதிவு செய்து வைத்து காத்திருக்கின்றனர். அந்தவகையில், இந்திய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முதன்மையான திட்டம் தான் டிஜிட்டல் இந்தியா. இது இந்தியாவை டிஜிட்டல் முறையில் அதிகாரம் பெற்ற சமூகமாகவும் அறிவுப் பொருளாதாரமாகவும் மாற்றும் நோக்குடன் உள்ளது. இந்த திட்டம் ஜூலை 1, 2015 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இதன்மூலம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அனைத்துத் துறைகளிலும் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்பொழுது, மோசடியில் ஈடுபடுபவர்கள் டிஜிட்டல் இந்தியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, வேலை கொடுப்பதாகக் கூறி பணம் கேட்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிஜிட்டல் இந்தியா தனது ட்விட்டரில் ஒரு போலி வேலைக் கடிதத்தின் படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், ‘மோசடி செய்பவர்கள் டிஜிட்டல் இந்தியாவின் பெயரை தவறாகப் பயன்படுத்துகிறார்கள், தங்களது அதிகாரப்பூர்வ லோகோவைப் பயன்படுத்தி, வேலை கொடுப்பதாகக் கூறி பணம் கேட்கிறார்கள் என்று பதிவிட்டுள்ளது. மேலும், இதுபோன்ற போலியான கடிதங்களை நம்பாதீர்கள், எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள், என்றும் எப்போதும் ஒரு வேலைக்கான உண்மையான தகவல்களை சரிபார்த்து அதன் பிறகு அதில் பதிவு செய்யுமாறு கூறியுள்ளது.