152 அரசாணையை ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் மேலும் வரும் மார்ச் இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசுக்கு எச்சரிக்கை.
மதுரையில், மாநகராட்சி மற்றும் நகராட்சி தொழிலாளர்களுக்கு விரோதமான அரசாணை 152 -ஐ ரத்து செய்ய வேண்டும், மதுரை மாநகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட பம்ப்பிங் ஸ்டேசன் பணியாளர்கள், பாதாளச் சாக்கடை பணியாளர்கள் உள்ளிட்ட 32 பேருக்கும் உடனடியாக பணி வழங்க வேண்டும், தினக்கூலி மற்றும் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணைப்படி தினச்சம்பளம் ரூ.721 வழங்க மதுரை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், நிரந்தர பணியாளர்களுக்கு சேமநல நிதியை அந்தந்த மாதத்திலேயே வழங்க வேண்டும், ஓய்வு பெறும் நாளிலேயே அனைத்து ஓய்வூதியப் பணப்பலன்களையும் வழங்க வேண்டும், தினக்கூலி தூய்மை தொழிலாளர்கள் மற்றும் டிரைவர்களை பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி மாநகராட்சி தொழிலாளர் சங்கம் பொறியியல் பிரிவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டடோர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
300க்கும் மேற்பட்ட, பொறியியல் துறை, சுகாதாரத்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தின் போது மதுரை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் சமைத்து உண்ணும் போராட்டத்திலும் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது பல முறை கோரிக்கை விடுத்தார் கண்டுகொள்ளாத திமுக அரசுக்கு சூடு,சொரணை வர வேண்டி மிளகாய்களை குவித்துவைத்து அதனை பயன்படுத்தி சமைத்து நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் கூறியதாவது,”பல போராட்டங்கள் நடத்தியும் தமிழக அரசு சமூகநீதிக்கு எதிரான அரசாணை 152ஐ ரத்து செய்யவில்லை எனவும் , மாநகராட்சி தொழிலாளர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றவில்லை இந்த நிலை நீடித்தால் வரும் மார்ச் இறுதியில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்” என தெரிவித்தார்