வீடு, கார் போன்ற விலை உயர்ந்த சாதனங்களை வாங்குவதற்குதான் இ.எம்.ஐ. திட்டம் இருப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போது மாம்பழங்களை வாங்கவும் இ.எம்.ஐ. திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை மகாராஷ்டிர மாநிலத்தில் விளையும் அல்போன்சா மாம்பழங்களுக்கு வழங்கப்படுகிறது. வாயில் எச்சில் ஊற வைக்கும் அல்போன்சா மாம்பழங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் கிடைக்கின்றன. அங்கு மாம்பழ விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் இ.எம்.ஐ. (EMI) திட்டத்தில் மாம்பழங்களை விற்பனை செய்து வருகிறார். “ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்களை தவணை முறையில் வாங்கும்போது, மாம்பழங்களை ஏன் வாங்கக்கூடாது” என்று சொல்கிறார் குருகிருபா டிரேடர்ஸ் உரிமையாளர் கௌரவ் சனாஸ். கொங்கன் பகுதியில் உள்ள தேவ்கட் மற்றும் ரத்னகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் அல்போன்சா மாம்பழங்கள் தலைசிறந்த மாம்பழங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தற்போது இந்த மாம்பழங்கள் சில்லறை விற்பனைச் சந்தையில் ஒரு டஜன் ரூ.800 முதல் ரூ.1300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
வாடிக்கையாளர் தங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, 3, 6 அல்லது 12 மாத தவணைகளாக EMI செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தவணைத் திட்டம் குறைந்தபட்சம் 5,000 ரூபாய்க்கு மாம்பழம் வாங்குவதற்கு மட்டும்தான் கிடைக்கிறது. இதுவரை நான்கு நுகர்வோர் இந்தத் திட்டத்தைப் பெற்றுள்ளனர் என்று உரிமையாளர் கௌரவ் சனாஸ் கூறினார்.