ஏமன் நாட்டில் திருமணத்திற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 21 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய கிழக்கு நாடான ஏமன் உள்நாட்டு போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. இந்த நாட்டில் ஒரு திருமண நிகழ்விற்காக துறைமுக நகரான ஹொடைடாவில் இருந்து கமரன் தீவிற்கு படகின் மூலம் சென்றுள்ளனர். அப்போது இவர்கள் சென்று கொண்டிருந்த படகு எதிர்பாராத விதமாக கடலில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 27 பேர் கடலில் மாயமாகியுள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து மீட்பு படையினர் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதற்குள் கடலில் மூழ்கியவர்களில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மீட்கப்பட்ட நபர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. வளமான காற்றின் காரணமாக படகு கவிழ்ந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. திருமண நிகழ்விற்கு சென்ற இடத்தில் படகு கவிழ்ந்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் எமன் நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.