பிளஸ்-1 மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சிக்கனம்பட்டி ஊராட்சி குப்பூரில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஓமலூர் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த மாணவியிடம் தற்காலிக உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் (வயது 40) கடந்த 2ஆம் தேதியன்று ’நீ ரொம்ப அழகா இருக்க’ என்று கூறி நைசாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலமுருகனிடம் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார். இதையடுத்து, அவர் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த பள்ளிக்கு விரைந்த அதிகாரிகள் மாணவியிடமும், உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினர். இதில், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து ஆசிரியர் மீது ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன் புகாரளித்தார்.
அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் வேறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா..? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.