இந்தியாவில் பாதுகாப்பு காரணமாக சீனச் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இதனால் டிக்டாக் உட்பட பல செயலிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் விளையாட்டுகளை பொறுத்தவரை பப்ஜி விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்தியாவில் மிகக் குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் மத்தியில் அதீத வரவேற்பை பெற்றது.
இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சனை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் பப்ஜி விளையாட்டை வேறு வடிவில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், மீண்டும் பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு மத்திய அரசு தடை விதித்தது. சுமார் 10 மாதங்களாக பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு இந்தியாவில் தடை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிஜிஎம்ஐ விளையாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கிராப்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மீண்டும் பிஜிஎம்ஐ விளையாட்டை அனுமதித்ததற்காக மத்திய அரசு அதிகாரிகளுக்கு நன்றி. கடந்த சில மாதங்களாக பொறுமையுடன் எங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக இந்திய கேமிங் சமூகத்துக்கு நன்றி” என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பிஜிஎம்ஐ விளையாட்டை டவுன்லோடு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.