புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவின் நகலை பெற ஸ்ரீமதி தாயார் தரப்பு வழக்கறிஞர் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். எனினும், மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையை வழங்க நீதிபதி புஷ்பராணி மறுத்துவிட்டார்.
கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் மாணவியின் உடல் இரண்டு முறை உடற்கூராய்வு செய்யப்பட்டது. அதன் முடிவுகளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவினர் முழு ஆய்வு செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்தனர். இந்நிலையில், ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையின் நகலை வழங்குமாறு ஸ்ரீமதியின் தாயார் செல்வி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவினை விசாரித்த நீதிபதி புஷ்பராணி இன்று ஜிப்மர் மருத்துவ குழுவின் ஆய்வறிக்கையின் நகலை பெற்று கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, ஆய்வறிக்கையின் நகலை பெறுவதற்காக செல்வியின் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் விழுப்புரம் நீதிமன்றத்திற்கு வருகை புரிந்தார். இந்நிலையில், உடற்கூராய்வு ஆய்வறிக்கை இரண்டு மட்டுமே வழங்கப்பட்டது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையை வழங்க நீதிபதி புஷ்பராணி மறுத்துவிட்டார். இந்நிலையில், வரும் 29ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை வருவதால், அன்றைய தினம் மனு தாக்கல் செய்து மருத்துவக் குழுவின் ஆய்வறிக்கையை பெறவுள்ளதாக ஸ்ரீமதியின் தாயார் வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.