ரயில்வே ஊழியர் ஒருவர் இறந்த பின், அவர் தத்தெடுத்த மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட்ட மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (CAT) உத்தரவை எதிர்த்து மத்திய அரசு மற்றும் தெற்கு கிழக்கு ரயில்வே தாக்கல் செய்த மனுவை, ஒடிசா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது..
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் டிக்சித் கிருஷ்ண ஸ்ரீபாத் மற்றும் சிபோ சங்கர் மிஷ்ரா அமர்வு “இந்து மதத்தில் மகன் இல்லாதவர் சொர்க்கம், முக்தி, இறுதிக்கதி ஆகியவற்றை இழப்பார் என்ற பொதுவான நம்பிக்கை உள்ளது. அதனால்தான் தத்தெடுப்பு என்ற நடைமுறை உருவானது” என்று குறிப்பிட்டனர்.
மேலும் “ ஒரு மனிதனுக்கு மகன் இல்லையெனில் அவனுக்கு சொர்க்கமும், முக்தியும், இறுதிக் கதியும் கிடையாது என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது. அதனால் தான், பழங்கால ஸ்ம்ருதி அறிஞர்கள் தத்தெடுப்பு என்ற நிறுவனத்தை உருவாக்கினர். இதனை அடிப்படையாகக் கொண்டு, தத்தெடுப்பு என்பது இந்துக்களின் தனிப்பட்ட சட்டம் (Personal Law) தொடர்பான விஷயம்..” என்று தெரிவித்தனர்..
தொடர்ந்து பேசிய நீதிபதிகள் “தத்தெடுப்பு என்பது இந்துக்களின் தனிப்பட்ட சட்டத்தின் கீழ் வருவது. 2003லேயே தத்தெடுப்பு நடைபெற்றுள்ளது. 2010ல் பத்திரம் பதிவு செய்தது தாமதமாக இருந்தாலும், அது தத்தெடுப்பின் செல்லுபடியாக்கத்திற்கு பெரிய பொருட்டல்ல.” என்று தெரிவித்தனர்.
எனினும் “ஊழியர் இறப்பதற்கு முன்பே தத்தெடுப்பு நிறைவேற வேண்டும்” என்று ரயில்வே மறுத்தது.. அதை ஏற்க மறுத்த நீதிமன்றம் “தத்தெடுப்பு பத்திரம் இறந்த பிறகு பதிவு செய்யப்பட்டதால் அது செல்லாது என்று கூற முடியாது.” என்று தெரிவித்தது..
மேலும் “1956ல் கொண்டு வந்த இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்பு சட்டம்,
பழங்கால சாஸ்திர சட்டங்களில் பல மாற்றங்களையும் திருத்தங்களையும் செய்துள்ளது. 2013ல் சிவில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், இந்த தத்தெடுப்பு செல்லுபடியாகும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக வழக்கப்படி செய்யப்படும் சடங்குகள், முறைகள் நிறைவேற்றப்பட்டவுடன், தத்தெடுப்பு செல்லுபடியாகிவிடும். பின்னர் செய்யப்படும் தத்தெடுப்பு பத்திர பதிவு
வெறும் ஆவண ஆதாரம் மட்டுமே – அதுவே தத்தெடுப்பை உருவாக்குவது இல்லை.” என்று தெரிவித்தது..
மேலும் “தத்தெடுத்த குழந்தைகளின் கருணை நியமன கோரிக்கைகளை
அதிகாரிகள் மிகுந்த கவனத்துடனும், தீவிரமாகவும் பரிசீலிக்க வேண்டும்.
இல்லையெனில் போலியான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு,
உண்மையில் தகுதியுள்ளவர்களின் வாய்ப்பு பாதிக்கப்படும்.” என்று தெரிவித்தது..
எனவே 2025 ஜனவரி 6 அன்று, CAT உத்தரவை உறுதி செய்த உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இரண்டு மாதங்களுக்குள் தத்தெடுத்த மகனின் கருணை நியமன கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி : ரயில்வே ஊழியர் கே. சாதுபத்ரா, ஒரு முன்னாள் டெக்னீஷியன் ஆவர்.. அவர் 2008ல் பணியில் இருக்கும் போதே இறந்துவிட்டார்.. அவர் 2003ல் ஒரு மகனை தத்தெடுத்திருந்தார். ஆனால் தத்தெடுப்பு பத்திரம் (Adoption Deed) 2010ல் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.. அதாவது அவர் இறந்த பிறகு. அவரது தத்தெடுத்த மகன், “கருணை அடிப்படையில் வேலை” கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் “ஊழியர் உயிருடன் இருக்கும்போதே தத்தெடுப்பு பத்திரம் பதிவு செய்யப்படவில்லை. எனவே இது செல்லாது” என்று கூறி ரயில்வே நிர்வாகம் அதை நிராகரித்தது.
தீர்ப்பாயம் (CAT) உத்தரவு : இதனை எதிர்த்து தத்தெடுத்த மகனும் அவரது தாயாரும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தை (CAT) அணுகினர்.. CAT, ரயில்வே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துதுடன், 60 நாட்களுக்குள் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ரயில்வே தாக்கல் செய்த மனுவை தான் ஒடிசா நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்துள்ளது..



