செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் வெளியூர்களுக்கு செல்லும்போது என்ன செய்வது என்று திண்டாடுவர். சொந்த வாகனத்தில் செல்பவர்கள் தங்கள் வண்டியிலேயே அழைத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், பொது போக்குவரத்தில் செல்பவர்கள் என்ன செய்வது? விமானத்தில் செல்லும் பயணிகள் குறிப்பிட்ட அளவிலான செல்ல பிராணிகள் வரை அதற்கான பெட்டியில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல விதிமுறைகள் உள்ளன. உட்காரும் இருக்கைகளுக்கு அருகிலேயே அவற்றை வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. ஆனால், ரயிலில் அப்படி அனுமதி கிடையாது. செல்ல பிராணிகளுடன் ரயிலில் பயணிப்பதாக தினமும் பல புகார்கள் வருகின்றன. நாய்களுடன் ரயில் பயணத்தைத் தடுக்க இந்திய ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய விதிகளின்படி நாய்களை முதல் வகுப்பை தவிர வேறு எந்த வகுப்பிலும் எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பாக பயணிகள் முதல் வகுப்பில் நான்கு பெர்த் அல்லது ஒரு கூபே முன்பதிவு செய்தால் மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதன் PNR எண்ணை வைத்து ஒரு நாயை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர். அதே போல நேரடியாக ரயிலில் நாயை ஏற்றிவிட முடியாது. ரயில் கிளம்புவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு நாயை சாமான்கள் வைக்கும் அலுவலகத்திற்கு கொண்டு வர வேண்டும். அலுவலர்கள் சோதனை செய்து அனுமதி வழங்கிய பிறகு தான் வண்டியில் ஏற்ற வேண்டும். முதல் வகுப்பு தவிர்த்து வேறு வகுப்பில் பயணம் செய்து பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும். கைது செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது.
சாமான்களை முன்பதிவு செய்யும் அலுவலகத்தில் நாயின் இனம், நிறம், பாலினம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். மருத்துவரின் சான்றிதழ் கட்டாயம். பயணிகள் தாங்களாகவே உணவு மற்றும் தண்ணீர் வழங்க வேண்டும். உள்ளூர் பாசஞ்சர் ரயில்களில் நாய்களுடன் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே சட்டத்தின் 77-ஏ பிரிவின்படி, செல்லப்பிராணிகள் ரயிலில் விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்ட அறைகளில் பயணிக்கலாம். அதற்கு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். இருப்பினும், விலங்குகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால் ரயில்வே அதிகாரிகள் எந்தப் பொறுப்பையும் ஏற்பதில்லை. இழப்புகளில் விலங்கு இறப்பு, நோய், உணவு அல்லது நீர் வழங்கல் இழப்பு, அதிகப்படியான விலங்குகளின் இருப்பு போன்றவை அடங்கும். ரயில் விபத்தில் கால்நடை இறந்தாலும் இழப்பீடு இல்லை.