தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவை சேர்ந்தவர்கள் எம் ஆர் கணேஷ் எம் ஆர் சுவாமிநாதன் சகோதரர்களான இவர்கள் இருவரும் நிதி நிறுவனம், பால் பண்ணை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வந்தனர் என்று கூறப்படுகிறது.
சொந்தமாக இருந்த ஹெலிகாப்டரில் வலம் வந்ததால் இவர்கள் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் எம் ஆர் கணேஷ் பாரதிய ஜனதா கட்சியில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவராக இருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரும் தங்களுடைய நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் குறைந்த அளவிலான காலகட்டத்தில் இரட்டிப்பு லாபம் பெற்று தருவதாக தெரிவித்து பல நபர்களிடம் கோடி கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளனர். அதன் அடிப்படையில், கும்பகோணத்தைச் சேர்ந்த ரகு பிரசாத் என்பவர் 2.50 கோடி ரூபாயும், சீனிவாசன் என்பவர் 38 லட்சமும் முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் நிதி நிறுவன உரிமையாளர்கள் பணத்தை திருப்பி கொடுக்காததால் அவர்கள் மீது ரகு பிரசாத் மற்றும் சீனிவாசன் உள்ளிட்டோர் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 2021 ஆம் வருடம் புகார் வழங்கினர்.
இது குறித்து விசாரணை நடத்துவதற்காக கோவையில் தங்கி இருந்த கணேஷை சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த சோமசுந்தரம் பூதலூர் உதவி ஆய்வாளராக இருந்த கண்ணன் உள்ளிட்டோர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சந்தித்ததாக கூறப்படுகிறது.
அப்போது இந்த புகார்களின் மீது வழக்கு பதிவு செய்யப்படாமல் இருப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் 6 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், முதல் தவணையாக 10 லட்சம் ரூபாய் கொடுக்குமாறும் கணேஷிடம் இருவரும் தெரிவித்துள்ளனர். அந்த சமயத்தில் தஞ்சையில் இருக்கின்ற தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் பொது மேலாளர் ஸ்ரீகாந்திடம் 10 லட்சம் ரூபாயை வாங்கிக் கொள்ளுமாறு அவர்களிடம் கணேஷ் தெரிவித்திருக்கிறார்.
அதன்படி மறுநாள் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு சோமசுந்தரத்திடம் ஸ்ரீகாந்த் ரூபாய் 5 லட்சத்தை வழங்கியதாக சொல்லப்படுகிறது அதன் பின்னர் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மேலும் 5 லட்சம் ரூபாயை ஸ்ரீகாந்திடமிருந்து சோமசுந்தரம், கண்ணன் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கு நடுவே நிதி நிறுவன மோசடி குறித்து மேலும் பலர் தொடர்ந்து புகார் வழங்கியதை அடுத்து நிதி நிறுவன உரிமையாளர்கள் கணேஷ், சுவாமிநாதன், பொது மேலாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் கண்ணன் உள்ளிட்ட இருவரும் ஆறு கோடி ரூபாய் பேரம் பேசி 10 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
ஆகவே இது குறித்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் ஒன்று திரட்டி வந்தனர். இந்த விவகாரத்தில் ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து சோமசுந்தரம், கண்ணன் உள்ளிட்ட இருவர் மீதும் தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சென்ற 12ஆம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்ற காவல் ஆய்வாளர் சோமசுந்தரம் தற்சமயம் தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரிலும் உதவி ஆய்வாளரான கண்ணன் திருவாரூரிலும் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.