இந்தியாவில் பெண்களை புறக்கணிப்பது மற்றும் அவர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க மறுப்பது ஆகியவை அதிகம் உள்ளது. கற்பழிப்பு, பாலியல் தொல்லை மற்றும் துன்புறுத்தல், பெண் சிசு கொலை ஆகியவை குறையாமல் உள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டெல்லி கார்ஸ்டின் பேஸ்டன் பகுதியில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்களுக்காக சேவா பாரதி என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுகாதார மையம் ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் டெல்லி நகரின் பிற பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களுக்கு செல்லும்போது, பல்வேறு சமூக அவலநிலையை எதிர்கொள்கின்றனர். பாலியல் தொழிலாளர்களிடம் மருத்துவர்கள் தவறான முறையில் அனுகுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சேவா பாரதி போன்ற தன்னார்வ அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள இந்த சுகாதார மையங்கள் மூலம் அது போன்ற சமூக அவல நிலையில் இருந்து விடுபட முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சமூகத்தில் தனித்து விடப்பட்டவர்களுக்காக புது வருடத்தில் சேவா பாரதி அமைப்பு இந்த சுகாதார அமைப்பை தொடங்கி இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.